Wednesday, 17 February 2021

நிலா பிள்ளை


 நிலா பிள்ளை

இன்றைக்கு தைப்பூச திருவிழா இத்திருவிழாவின் போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஈரோடு பகுதிகளில் நிலா பிள்ளை என்ற ஒரு பாரம்பரியமிக்க கொண்டாட்டம் கடைபிடிக்கப்படுகிறது
திருவிழாவானது தைப்பூசத்துக்கு ஏழு அல்லது ஒன்பது முதல் 15 நாட்களுக்கு முன்னதாக தொடங்கி தைப்பூசத்தன்று முடிவடையும் ஆரம்பத்தில் சிறு பிள்ளைகள் இரவு வேளைகளில் உணவுகளைக் கொண்டு சென்று ஓரிடத்தில் வைத்து கும்மி அடிப்பார்கள் . இறுதி நாளன்று மாவிளக்கு தட்டு வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சேர்ந்து கும்மியடித்து மகிழ்வர் என ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது இது இருந்தாலும், ஆரம்ப காலத்தில் சிறு குழந்தைகளுக்கு விளையாடிக்கொண்டு சோறூட்டும் நிகழ்வாக காணப்பட்டாலும் இவ்விழாவில் சித்தர்களுக்கெல்லாம் கிட்டாத அரிய செயல்பாடுகள் கடந்த ஐந்து ஆண்டு வரை செய்யப்பட்டு வந்தது இன்றைய நாகரீக மோகம் அதனை மறந்து விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை நிலா பிள்ளாய் கொண்டாட்டத்தில் பூப்படையாத சிறிய பெண் பிள்ளையை மையமாகக்கொண்டு இவ்விழாவானது கொண்டாடப்படும் அச்சிறுபிள்ளைக்கு இறுதி நாளன்று சாமி வரும்வரை அங்குள்ள அனைத்து வயதை சார்ந்தவர்களும் குழு குழுவாக சேர்ந்து கும்மி அடித்து பாடல் பாடி அப்பிள்ளையை நடுவில் உட்கார வைத்து வலம் வருவர். விடிந்தாலும் பல பெண்களுக்கு சாமி வந்தாலும் அந்தப் சிறுப்பெண்ணுக்கு சாமி வந்து அருள்வாக்கு சொல்லாமல் விழாவை முடிக்க மாட்டார்கள் . இதெல்லாம் சும்மா மூட பழக்க வழக்கம் என்று கூறி ஒதுக்கி இத்திருவிழாவில் சினிமா பாடல்களை போட்டுக்கொண்டு நடனம் ஆடும் அளவிற்கு மாறிப்போய் இருந்தபோதிலும் இதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம் தான்.
எவ்வளவு ஆண்டுகள் தவம் செய்தாலும் ஏன் முக்தி பெற்றாலும் ஜீவாத்மாவை  பரமாத்மாவுடன் கலக்க தான் செய்யமுடியும்.
இதுவரை எந்த சித்தரும் பரமாத்மாவை ஜீவாத்மாவுடன் கலக்க செய்தது இல்லை . ஆனால் இந்த நிலா பிள்ளாயின் போது சுற்றி உள்ளவர்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை பாடலாகப் பாடி கும்மி அடித்து விரவிக்கிடக்கும் பரமாத்மாவை சின்னஞ் சிறிய பெண் பிள்ளையின் உடலில் இறங்கி ஜீவாத்மாவுடன் கலக்கச் செய்து அருள்வாக்கு சொல்ல செய்வார்கள்
யார் எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சாத்தியமில்லை என்று கூறினாலும் இதனை நேரில் பார்த்த அல்லது நிலா பிள்ளாயாவில் முழுமையாக ஈடுபாடு கொண்டு இதில் கலந்து கொண்ட இன்றைக்கு ஐம்பது வயதைத் தாண்டிய அனைவருக்கும் உளமார புரியும்.
இதனை ஆன்மீக கண்ணோட்டத்துடன் பார்க்காமல் ஆசீவக கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது இதனுள் இருக்கும் அறிவியலும் ஆன்மிக கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது சித்தர்களின் மிஞ்சும் சக்தியும் கைகூடும் திறனை அறியமுடிகிறது
இதன் நாளைய வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியாது. நேற்றைய வடிவம் சக்தி மயமாக இருந்தபோதும் இன்றைய வடிவம் சகதி வடிவமாக உள்ளது.
வெளிப்படையாக கவனிக்கும் போதும் உள்ளக்கிடக்கையை கவிதையாய் மாற்றி நாட்டுப்புற பாடல் பாட வைக்கும் பெண்களின் கற்பனை திறனை தூண்டும் நிகழ்வு இது
தை மாதங்களில் இரவு நேரப் பணி உடலுக்கு நல்லது எனவே அதனை சிறு குழந்தைகளுக்கும் கிடைக்கவும் சலுப்படையாமல் தெரியாமலிருக்க கும்மியடிப்பது வழக்கம்
குனிந்து நிமிர்ந்து துணி அடிப்பதன் மூலம் பெண்களின் முதுகெலும்பு வலிமை அறிவது இவ்விழாவின் மற்றொரு சிறப்பு 
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என கொண்டாடிய விழாக்கள் எல்லாம் இன்று வேண்டுதலைக்கும் வேதனைக்கும்  என கொண்டாடும் நிலை தான் ஏனோ
ஆசீவகம் மறைக்கப்பட்ட போதும் மற்ற மதங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிய போதும் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் இம்மாதிரி விழாக்களை எந்த வடிவிலேணும் கொண்டாடுவோம்

No comments:

Post a Comment